Sunday, 17 July 2016

வோர்ட் பிரஸ் மூலம் இணையதளம் வடிவமைக்கலாம் வாங்க !


வோர்ட் பிரஸ் மூலம் இணையதளம் வடிவமைக்கலாம் வாங்க !    
இவ்வாறு இணைய தளம் அமைக்க மிக எளிய அறிமுகம் தந்து  வாசகர்களை அன்போடு அழைப்பவர் 



                           குணசீலன் வீரப்பெருமாள். [author.guna@gmail.com]
இன்று இணைய உலகம் காற்று போல எங்கும் எதிலும் பரந்து விரிந்து கொண்டிருக்கிறது. இதன் தாக்கமாக மளிகை கடை அண்ணாச்சி முதல் மல்டி நேஷனல் கம்பெனியின் எக்சிகியூடிவ் வரை எல்லோரும் தனக்கென தனியே ஒரு இணையதளம் வைத்திருக்கிறார்கள். இணையதளம் என்றால் என்ன என்று விளக்கம் கொடுக்க தேவையில்லாத அளவிற்கு, இன்று இணைய உலகம் வளர்ந்துவிட்டது என்று, எனக்கும், உங்களுக்கும் நன்றாகவே தெரியும்.           
இணையதளம் வைத்திருப்பது எல்லாம் அனாவசியம் என்பது போய் அத்தியாவசியம் என்றாகிவிட்ட நிலையில் இணையதள வடிவமைப்பு துறை ஏறுமுகத்தில் ராக்கெட் வேகத்தில் பறக்க தொடங்கியிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் முக்கிய நகரங்கள் பலவற்றில்  இணையதள வடிவமைப்பு நிறுவனங்கள் பல தொடங்கபட்டிருக்கின்றன. இதனால் இந்த துறை சார்ந்த வேலை வாய்ப்புகளும் பெருகியுள்ளன. சமீப காலங்களில் ஏற்பட்ட இணைய வளர்ச்சிக்கு சமுகவலைதளங்களை முக்கிய காரணங்களாக சொல்லாம். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக முதல் நாள் பேஸ்பூக்கில் பதிவேற்றிய படத்திற்கு எத்தனை பின்னுட்டங்கள், விருப்பங்கள் வந்துள்ளன என்பதை தான் பார்க்கிறோம். அதன் பின்னர்தான் மற்ற வேலைகள் எல்லாம். 
வோர்ட்பிரஸ்.காம் Vs வோர்ட்பிரஸ்.ஓஆர்ஜி (org)
பெரும்பாலனவர்களுக்கு இந்த இரண்டு தளங்களை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வோர்ட் பிரஸ்.காம், வோர்ட்பிரஸ்.ஓஆர்ஜி இந்த இரண்டு தளங்களும் ஒரே நிறுவனத்தை சேர்ந்தவைதான் என்றாலும், வசதிகளும், தன்மைகளும் கொஞ்சம் மாறுபடும்.
ஒரே வரியில் சொல்லப்போனால் வோர்ட் பிரஸ்.காம், ப்ளாக் (Blog) என்று சொல்லப்படுகின்ற இலவச வலைபூக்களை நிர்வகிக்க கூடியது. (கூகிள் பிளாக்கர் போன்றது). வோர்ட்பிரஸ்.ஓஆர்ஜி முழு இணையதளங்களை நிர்வகிக்ககூடியது.    
வோர்ட் பிரஸ்.காம் முற்றிலும் இலவசம். இதன் மூலம் உருவாக்கப்பட்ட தளங்களை நிர்வகிக்க நீங்கள் ஒரு பைசா கூட செலவு செய்யவேண்டாம். வோர்ட் பிரஸ் மென்பொருளை நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இந்த தளத்தை அனைவரின் பார்வைக்கு கொண்டுவர ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயரை நீங்கள் காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இவை எல்லாவற்றையும் வோர்ட் பிரஸ்.காம் பார்த்துக்கொள்ளும்.
உங்கள் மின்னஞ்சல் முகவரி மட்டும் கொடுத்து உள்நுழைந்து கொண்டால் போதும். நேராக சென்று பதிவுகளை பிரசுரிக்கும் வேலைதான் உங்களுக்கு. குறிப்பிட்ட எண்ணிகையில் உள்ள வோர்ட்பிரஸ் வார்ப்புருக்களை உங்கள் ப்ளாக்கில் (Blog) நிறுவிக்கொள்ளலாம். 
வோர்ட்பிரஸ்.காம் மூலம் இயங்கும் தளங்களை ஆங்கிலத்தில் வோர்ட்பிரஸ் ஹோஸ்டட்டு வெப்சைட் என்று சொல்வார்கள். (Wordpress Hosted Website)
இப்படி வசதிகளை கேட்டவுடன் வோர்ட்பிரஸ்.காம்- லயே நாம் இணையதளம் ஆரம்பித்துவிடலாம் என்று நினைகிறீர்கள் தானே ? ஒரு நிமிடம் பொறுங்க.. இதையும் நான் சொல்லிவிடுகிறேன்.   
முதலில் உங்கள் தளத்தின் பெயரை mywebsite.com என்று நீங்கள் வைத்துக்கொள்ள விரும்பினால், வோர்ட்பிரஸ்.காமில் அது முடியாது. உங்கள் அனுமதி இல்லாமலயே Wordpress.com என்று உங்கள் டொமைன் பெயருக்கு பின் பகுதியில் தானாகவே சேர்ந்துகொள்ளும். உங்கள் தளத்திற்கு வருகை புரிய நினைக்கும் பார்வையாளர் ஒருவர்  mywebsite.wordpress.com என்று இணைய உலவியில் தட்டச்சு செய்துதான் உங்கள் தளத்திற்கு வருகை தர முடியும். 
என்று விவரமான விளக்கம் தந்து நம்மையே தேர்ந்தெடுக்க குணசீலன் வாய்ப்பளிக்கிறார். 
இந்த நூலைப் பொறுமையாக ஒன்றுக்குப் பத்து முறை வாசித்து, கூடவே ஒரு மடிக்கணினி அல்லது மேஜைக்கணினி வைத்து ஸ்டெப் பை ஸ்டெப் பயிற்சி செய்து பார்ப்போர் நிச்சயம் ஒரு தனித் திறமையை எட்டுவர்.
வெறும் ரூ.100/- விலையில் இப்படி ஓர் அற்புதமான தொழில்நுணுக்கப் பயிற்சி 
ஏட்டை வெறும் லாபம் நோக்கம் கருதாமல் தங்கள் தனித்த தொழில் நேர்த்தியுடன் வெளியிட்டிருப்போர் 
நர்மதா பிரசுரம் 
10, நாணா தெரு,
தி.நகர், சென்னை-600017
தொ.பே. எண் 24334397











Friday, 8 July 2016

டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் அனுபவச் சுவடுகள்


அனுபவச்   சுவடுகள் நூல் முகப்பு
டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்  (1937) திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர், இளம் வயதில் ஏழ்மைச் சூழலில், தன் அஸ்திவாரப் பருவத்தின் 10 ஆண்டுகள் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தின் கொடை நிழலில் வளர்நதவர். இந்திய அரசுப் பணியில் (IRAS) 15 ஆண்டுகளும் (1960-1975) ஆசிய வளர்ச்சி வங்கியில் 22 ஆண்டுகளும் (1975-1998) பணிபுரிந்து, ஓர் இயக்குநராகப் பணி ஓய்வு பெற்றார்.
1998 ஆம் ஆண்டு தாய்நாடு திரும்பியதிலிருந்து இலக்கிய, சமூகப் பணிகளில் ஈடுபாடு கொண்டுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். இவற்றில் நாவல்கள், குறு நாவல்கள், சிறுகதை / கட்டுரை / கவிதைத் தொகுப்புகளும் அடங்கும். இலக்கிய சமூக, வளர்ச்சிக் களன்களைத் தழுவிய இவரது தமிழ்க்கட்டுரைகள் ஏழு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.
பாரத் ரத்னா சி. சுப்பிரமணியம் அவர்கள் நிறுவிய தேசிய வேளாண் நிறுவனத்திலும் தமிழ் மொழி / பண்பாட்டு ஆய்வுமையமான மொழி அறக்கட்டளையிலும் அறங்காவலராகப் பணியாற்றி வருகிறார். சாகித்ய அகாதமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.


உள்ளத்தை உருக்கும் ஒரு சில நினைவுகள் 
இல்ல நினைவுகள்
-------------------------
என் வாழ்வின் அடித்தளமாக விளங்கும் இரண்டு சக்திகளை நான் மன நெகிழ்வுடன் நினைக்காத நாளே இல்லை ஒன்று என் தாயார்; இரண்டு, என் வாழ்வின் நாற்றங்கால் பருவத்தில் என்னுடைய கல்விக்கும், ஆளுமை வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம்.
1948. இல்லத்தில் முதல் ஆண்டு, நான் பத்து வயது சிறுவன். அது டுமையான ரேஷன் காலம். பொதுமக்களின் தர்மத்தின் அடிப்படையில் இயங்கி வந்த இல்லத்துக்கு மிகவும் நெருக்கடியான நாட்கள். நூறு வளரும் பருவத்துச் தசிறுவர்களைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு. உலைக்களத்தில் இட்ட கரி….உண்ட உணவைச் செரித்து அடுத்த உணவுக்குத் துடிக்கும் பருவம். நான்கு ஆண்டுகள் இந்தச் சவாலைச் சந்தி…….இல்லம் எவ்வாறு திணறியது என்பதை இன்று நினைத்துப் பார்க்கம்போதும் வியப்பும், பிரமிப்பும் மேலிடுகிறது.
ஆனால் அந்த நாட்களிலோ ஒவ்வொரு நேர உணவுக்குப் பிறகும் ஓர் ஊமைப் பசி உடலிலே நெருடும். மதிய, இரவு உணவின் போது நிறைய நீர்த்த மோரைக் குடிப்பதை இப்பசியை ஏமாற்றும் தந்திரமாக நாங்கள் பரவலாகக் கையாண்டோம். அன்றும் சரி, இன்றும் சரி இந்த அனுபவம் குறித்த ஒரு கைப்புணர்வு தீண்டியதே இல்லை. பெரும் மயற்சியுடனும், ஈடுபாட்டுடனும் ஒரு பெரிய நெருக்கடியை இல்ல நிர்வாகிகள் சந்தித்தனர். நம்மை எல்லாம் கட்டிக் காத்தனர் என்ற நன்றி உணர்வே மிஞ்சுகிறது.
மேற்கூறிய அனுபவம் மூலம் என்னுள் ஓர் ஆழமான தாக்கம் அன்னம் ந நிந்த்யாத் - உணவை நிந்தனை செய்யாதே (பழிக்காதே) - என்ற வேத வாக்கின் பல பரிமாணங்களை சுவீகரித்துக்கொண்டுள்ளேன்.   இது பல உருவங்களில் வெளிப்படுகிறது. தேவைக்கு மீறி உண்ணுதல்;  தேவைக்கு அதிகமாக உணவைக் கலத்தில் பறிமாறிக்கொண்டு, பிறகு விரயம் செய்தல்; திருமணம் போன்ற சடங்குகளிலும், பார்ட்டிகளிலும் உணவு வகைகள் வீணாகும் அசிங்கம்; உணவு என்ற புனிதத்தை ஆடம்பரத்தின் ஒரு சின்னமாக வடுப்படுத்துதல் - இவை அனைத்தும் என்னிடத்தில் ஒரு வகையான அருவருப்பையும், கோபத்தையும் இன்றும் ஏற்படுத்துகின்றன.
ராமகிருஷ்ணா இல்லம் என்னில் பல நிலையான தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அவற்றில் முக்கியமானது செல்வம் / ஏழ்மை பற்றிய என் கண்ணோட்டம். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், சுவாமி விவேகானந்தர் அருள் வாக்குகளின் செல்வாக்கினாலோ, இல்லத்தின் ஆரோக்கியமான சூழலினாலோ இந்தத் தாக்கம் நிகழ்ந்திருக்க வேண்டும். அந்த இளம் பருவத்திலேயே எனது ஏழ்மையைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை என்னைத் தீண்டியதே இல்லை. ஒரு சிறுவன் ஏழையாக இருப்பதோ அல்லது செல்வச் செழிப்பு உள்ளவனாக இருப்பதோ ஒரு genetic lottery தான் (தாய் தந்தையரின் செல்வச் செழிப்பு அல்லது வறுமை சார்ந்த விளைவு) என்ற விவேகம் அந்தச் சிறு வயதில் எனக்கு வாய்த்ததை இன்று எண்ணிப் பார்த்தாலும், எனக்கு ஆச்சரியம் மேலிடுகிறது. இந்தப் பின்புலத்தில் செல்வந்தர்கள்பால் அதீத மரியாதை உணர்வோ பொறாமையோ என் உள்ளத்தை வடுப்படுத்தியது இல்லை. இந்தப் பக்குவம் இல்லம் எனக்கருளிய கொடை என்று நன்றி உணர்வுடன் பின்னோக்கிப் பார்க்கிறேன்.
இல்லத்தில் வாழ்ந்த முதல் மூன்று ஆண்டுகளில் நொறுக்குத் தீனிக்காக, எனக்கு நானே அருளிக்கொண்ட வாராந்திர பட்ஜெட் காலணா (ஒரு ரூபாயில் 64ல் ஒரு பாகம். திங்களும் வெள்ளியும் பொன்னாட்கள். மாலையில் விளையாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் திருட்டுத்தனமான எந்த மாணவனும் என்னைப் பின் தொடரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு ஆத்தூர் கிராமத்துக் கடைப் பகுதிக்குச் செல்வேன். பயண இலக்கு கமர்கட்டு. ஒரு பாட்டி ஒரு நசுங்கிய அலுமினியத் தட்டில் கமர்க்கட்டைப் பரப்பி வைத்திருப்பார்கள். கன்னங்கரேலென்று இருக்கும். ஈக்களால் ஆன கம்பளம் கமர்க்கண்டு உருண்டைகளைப் பரிவுடன் போர்த்தி இருக்கும். என்னைக் கண்டவுடன் வா தம்பி என்று அன்படன் வரவேற்பார்கள் பாட்டி. திங்கள் கிழமை காலணா கை மாறும் இரண்டு கமர்க்கட்டுகளுக்கான விலை. ஒரு வாரத்திற்கான முதலீடு - திங்கள் ஒரு கமர்க்கட்டு, வெள்ளி ஒன்று. கமர்க்கட்டை உடனே கடித்துச் சாப்பிட மாட்டேன். அரை மணி நேரத்துக்கு மேல் குதப்பி, ரசித்து இனிப்பு சாயலுள்ள உமிழ்நீரை விழுங்குவேன்.
ஒரு மாலை நேரம். எனது கண்ணாமூச்சி வளையாட்டில் தோல்வி. என்னுடைய நண்பன் ஒருவனுக்கு மூக்கில் வியர்த்துவிட்டது. அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு நான் கடை நோக்கி செல்லும்போது, யாரோ பின்தொடர்ந்து வருவது போலக் குறுகுறுப்பு. திரும்பிப் பார்த்தால், ஓர் ஒற்றன் போல் அந்த நண்பன். சுதாரித்துக்கொண்டேன். ஒரு வியூயகம். அவனை ஆரவாரத்துடன் அழைத்து, ஆற்றங்கரைக்குப் போகலாமே என்று பாலாறு ஆற்றுக்கு அவனுடன் சென்றேன். அன்று எனக்கு கமர்க்கட்டு பட்டினி. நான்கு ஆண்டுகளாக என்னை விடாமல் துரத்தியது. பல தருணங்களில் அனைத்து பள்ளி மாணவர்களும் குழுமியுள்ள கூட்டங்களில், என்னை நிற்க வைத்து ரங்க ஐயங்கார் அவர்கள். இவன் சுவாமிக்காக வெச்சிருந்த முந்திரிப் பருப்பைத் திருடினவன் என்று பிரகடனம் செய்வார். முதலில் வெட்கி, வருந்தி, என்னுள் உடைந்து போனேன். பிறகு மரத்துப் போய்விட்டது.
பள்ளி இறுதிப் பொதுத் தேர்வு முடிந்துவிட்டது. இல்லத்தைவிட்டு தத்தம் வீட்டுக்கும், எதிர்காலம் என்ற கேள்விக்குறியை நோக்கியும் செல்லும் நேரம். தலைமை ஆசிரியர் ரங்க ஐயங்கார் என்னைக் கூப்பிட்டு அனு்பபினார். நீ படிப்பிலயும், நடத்தையிலயும் நன்னாவே பண்ணியிருக்கே. School Pupil Leader பொறுப்பிலயும் நல்ல வேலை பண்ணியிருக்கே. பப்ளிக் எக்ஸாம்லேயும் ஸ்கூல்லே முதலா வருவாய்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. மைலாப்பூர்ல ஹோமுடைய காலேஜ் ஸெக்ஷன் இருக்கு. தெரியுமோன்னோ? அதுலே ஒன்னெ சேத்துக்கணும்னு எழுதப்போறேன்” என்றார். அவர் பரிவில் நான் நெகிழ்ந்த போனேன். நான்கு ஆண்டுகளாக என் இளம் உள்ளத்தை எவ்வாறு புண்படுத்தியுள்ளார் என்பதை அவரிடம் சொல்லிக்காட்ட வேண்டும் என்ற என் திட்டம் இடம் தெரியாமல் மறைந்தது.
இன்னோர் ஆசிரியர் 10-11ஆம் வகுப்புகளில் ஸோஷியல் ஸ்டடீஸ் பாடம் கற்பித்த எஸ் எஸ் கிருஷ்ணசாமி அய்யா எடுத்துக்கொண்ட பாடங்களை மிகவும் தெளிவாக, அழகாக சுவையாகக் கற்பிக்கும் ஆற்றல் பெற்றவர். ஆன்மிக இலக்கிய கருவூலங்களில் - தமிழ், சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளில் நல்ல தேர்ச்சி உள்ளவர். ஆரவாரமின்றி, நயம்படப் போதிப்பதில் திறம் மிக்கவர். அவர் கூறுவார்:
இங்கே பாருங்கோ குழந்தைகளா! உங்களுக்கு ஸோஷியல் ஸ்டடீஸ் கத்துக் கொடுக்க எனக்குச் சம்பளம் தரா. அதைச் சொல்லிக் கொடுத்துடறேன். பரீக்ஷைக்கு பிரயோஜனமா இருக்கும் ஆனா எனக்கும் ஆத்ம திருப்தின்னு உண்டோன்னோ. நீங்களும் நல்ல மனுஷாளா வளரணுமோன்னோ.  அதனாலே, பாடத்துக்கு 25 நிமிஷம்: அதுவே ஜாஸ்தி 15 நிமிஷம் ஒங்க வாழ்நாள் பூரா உபயோகமாகிற நல்ல விஷயங்கள்”. இந்த அணுகுமுறையை மிகவும் அழகாகச் செயல்படுத்துவார். திருக்குறள், தேவாரம் திவ்யப் பிரபந்தம், வள்ளலார், பாரதியார், பகவத்கீதை, உபநிடதம், ஷெல்லி, தாகூர் - இந்த விருந்து ஒவ்வொரு நாளும் கால்மணி நேரம். அற்புதமான ஆளுமை வளர்ச்சிப் படையல்கள்.
மைலாப்பூர் ராமகிருஷ்ணா ஹோமில் இருந்தபோது என்னைப் போன்ற சில மாணவர்களுக்கு அவ்வப்போது கூரியர் வேலை வரும். தபால் செலவைக் குறைப்பதற்கான சிக்கன உத்தி. முக்கியமாக, அழைப்பிதழ்களை விநியோகம் செய்யும் வேலை. பெரும்பாலும் மேல்தட்டுப் பிரமுகர்களின் வீடுகளுக்கு, பல நிகழ்வுகளுக்கு அழைப்பிதழ்கள் இருக்கும் - ஹோம் ஆண்டு விழா, நவராத்திரி நிகழ்வுகள், ராமகிருஷ்ணர்/ சாரதாமணி/ விவேகானந்தர் ஜெயந்தி… என்னுடைய பொறுப்பு வட்டம் மைலாப்பூர் - எட்வர்ட் எலியட்ஸ் சாலையும் (இப்போது ராதாகிருஷ்ணன் சாலை) அந்தச் சாலையிலிருந்து பிரியும் தெருக்களும், லஸ் சர்ச் சாலையும் அதைச் சுற்றி உள்ள தெருக்களும். எட்வர்ட் எலியட்ஸ் சாலையில் உள்ள பங்களாக்களின் பெயரும், அதில் வசிக்கும் குடும்பத் தலைவர் பெயரும் எனக்கு அத்துபடி. பங்களா கேட்டை ஒட்டிய மர/ பளிங்குப் பலகைகளில் எழுதப்பட்டு இருக்கும். தினமும் காலேஜ் 4 மணிக்கு முடிந்தவுடன், மெரினாவில் உள்ள ப்ரெஸிடென்ஸி காலேஜிலிருந்து, மைலாப்பூரில் விவேகானந்தா காலேஜ் அருகில் உள்ள ராமகிருஷ்ணா ஹோம் வரை நடந்து தான் வருவேன். பஸ் கட்டணத்துக்கு வசதி இல்லாததால். எட்வர்ட் எலியட்ஸ் சாலையில் நடக்கும்போது, அடுத்த பங்களாவின் பெயரைச் சொல்லிக்கொண்டு, அதை சரி பார்த்து வெற்றிக் கிளுகிளுப்பை அடைவது நடையின் சோர்வைக் குறைக்கும். பிறகு இந்த விளையாட்டும் சலித்துவிடும், தோல்விக்கே வாய்ப்பில்லாததால் ஒரு ஞாயிற்றுக்கிழமை, கையில் ஒரு கட்டு அழைப்பிதழ்களுடன் ஒரு பங்களாவில் நுழைந்தேன். ஏழ்மை முத்திரை பதித்த உருவத்துடன், காலிங் பெல்லைத் தயக்கத்துடன் அழுத்தினேன். ஓர் இளம் பெண் கதவைத் திறந்து, ஓர் அலட்சியப் பார்வையையும், ஒரு கேள்விக் குறியையும் என்மேல் எறிந்தாள். காலேஜில் அவளைப் பார்த்த ஞாபகம். “நான் ராமகிருஷ்ணா ஹோம்லேருந்து வரேன். இந்த இன்விடேஷனைக் கொடுக்க வந்திருக்கேன் என்றேன். ஒய்யாரமாக அதை வாங்கிக்கொண்டு டபால் என்று கதவை மூடிவிட்டு. வீட்டுக்குள் மறைந்து விட்டாள். நம்ப ஹோமுக்காக இதைப் பண்ணறோம். இதுல ஈகோ பிரச்சனையே இல்லை என்று எண்ணிக்கொண்டு ஒரு புன்சிரிப்புடன் அடுத்த முகவரியைப் பார்த்து நகர்ந்தேன்.
ஒரு வருஷத்துக்குப் பிறகு அப்போது நான் காலேஜ் யூனியன் ப்ரெஸிடெண்ட். அழைப்பிதழ்கள் கட்டுடன் அதே பங்களாவுக்குள் நுழைகிறேன். அதே பெண் கதவைத் திறந்துகொண்டு வெளியே வருகிறாள். என்னைப் பார்த்தவுடன் முகமெல்லாம் பல், ப்ளீஸ் கம் இன் என்று உள்ளே அழைக்கிறாள். “அப்பா, இது மிஸ்டர் சுப்ரமணியன். எங்க காலேஜ் யூனியன் ப்ரெஸிடெண்ட். பேச்சுப் போட்டிகளில் நெறய ப்ரைஸ் வாங்கி இருக்கார்” என்று சோபாவில் உட்கார்ந்திருந்த அப்பாவுக்கு குதூகலமான அறிமுகம். நான் பவ்யமாக நின்றுகொண்டே, “நான் ராமகிருஷ்ணா ஹோம்லேருந்து வரேன். இந்த இன்விடேஷனைக் கொடுத்துட்டுப் போக வந்திருக்கேன்” என்று ஒரு அழைப்பிதழை அவரிடம் கொடுத்துவிட்டு மரியாதையுடன் அங்கிருந்து கிளம்பினேன்.



கவிதா வெளியீடு பின்னட்டை

 னிதர்களை நினைவுகூர்தல் மிக இயற்கையாக நிகழ்கிறது என்பதுதான் இந்த நூலின் பெரிய பலம். இன்னும் கொஞ்சம் சொல்ல மாட்டீர்களா என எண்ணும் நேரத்தில் புத்தகம் முடிந்துவிட்டது.
அத்தைக்கு நானும் ஒரு கொழந்தை. அந்தத் திருடனும் ஒரு கொழந்தைதான். மாபெரும் வாக்கியம் போல என் மனத்தில் இது இடம்பெற்றுவிட்டது. தனக்குக் கொடுத்த பாலை, தான் பாதி மட்டும் குடித்துவிட்டு நாய்க்குட்டிகளுக்கு மீதியைப் பகிர்ந்துகொள்ளும் சாலையோரத் தாயும் வாழ்க்கையையே செய்தியாக வாழ்பவள்தான். கல்லூரிப் படிப்புக்கு வழிகாட்டும் ரங்க ஐயங்கார் சித்திரம் அருமை.  ஆங்கிலம் தெரியாத கண்ணுச்சாமி, வெளிச்சத்தை உருவாக்கிக் கொள்ளும் கந்தசாமி, சந்துருவின் மனைவி, மகள் எனப் பலவகையான மகத்தான மனிதர்களை இந்தச் சுவடுகள் வழியாக நான் அறிமுகம் செய்துகொண்டேன்.

(பாவண்ணனின் கடிதத்திலிருந்து)

Saturday, 2 July 2016

கானகன்



இளம் எழுத்தாளர் லட்சுமி சரவணக்குமார் எழுதிய, கானகன் என்ற இந்த நாவல். முழுக்க காடு மற்றும் வேட்டையைப் பற்றி வெளிவந்த நாவல் இது. வேட்டையாடுதல் தொடர்பான நூல்கள், தமிழில் மிகக் குறைவு. 1950களில் ஜிம் கார்பெட் எழுதிய வேட்டை தொடர்பான நூல்கள்தான் இங்கு பிரபலமாக இருந்தன. இந்நிலையில் கானகன் நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. வேட்டைக்காரனின் மனநிலை, வேட்டையாடும் முறை ஆகியவற்றோடு, அன்றாடம் மனித வாழ்க்கையில் நடக்கும் வேட்டையை ஒப்பிட்டு கதை செல்கிறது. கதையின் நாயகன் தங்கப்பன், புலி ஒன்றை வேட்டையாடுவதிலிருந்து நாவல் துவங்குகிறது. மூன்று குட்டிகளை ஈன்ற, புலி தண்ணீர் குடிக்க வரும்போது, அதை ஈர்க்க ஆட்டை மரத்தில் கட்டி வைத்து, அதை நோக்கி புலி வரும்போது, சுட்டுக் கொல்கிறான். கேரம் விளையாட்டில், ஒரு காயை பாக்கெட் செய்யும்போது ஏற்படும் திரில் போல மிருக வேட்டையை ஒப்பிடுகின்றனர். இப்படியாகச் செல்லும் கதையின் கடைசி கட்டத்தில், தங்கப்பன் எந்த புலியைச் சுட்டுக் கொன்றானோ, அந்தப் புலியின் குட்டியால் கொல்லப்படுவதோடு கதை முடிகிறது. தங்கப்பனை பழிவாங்க, இந்த சம்பவம் நடக்கவில்லை. வேட்டையின்போது இயல்பாக நடக்கும் சம்பவமாகவே, தங்கப்பன் கொல்லப்படுகிறான். 

லட்சுமி சரவணக்குமார்
காட்டில் வாழும் எந்த மிருகமும் இயல்பாக சாவதில்லை. அது பழம் இழக்கும்போது, மற்றொரு மிருகத்தால் கொல்லப்படுகிறது. குறிப்பாக புலி வயதாகும்போது மற்றொரு புலியால்தான் கொல்லப்படுகிறது. அதுபோலவே, வேட்டையாடுதலையே வாழ்க்கையாகக் கொண்ட தங்கப்பனிடம், மென்மையான உணர்வு, இரக்கம் போன்றவை வற்றிப்போய், காட்டில் வாழும் மனித மிருகமாக மாறுகிறான். வேட்டையாடுதலை இரக்கமற்ற சொலை என்பதை மறந்து, அதை ஒரு தீரச் செயலாக பார்க்கின்றனர். இங்கு கருணைக்கு இடமில்லை. இயல்பான வாழ்க்கையிலும், தேவைகளுக்காக போராடத் துவங்கும் மனிதன், தன் தேவைகளை பூர்த்தி செய்து கெள்வதற்கு எதையும் செய்கிறான். அதைத் தான் வாழ்வின் வெற்றியாகவும் கருதுகிறான். இங்கும் வெற்றியைத் தவிர மற்றவைக்கு இடமில்லை. இதை சிறப்பாகப் படம்பிடித்து காட்டுகிறது கானகம் நாவல். 2016 ஆண்டிற்கான சாகித்திய அகா​​​​தெமி யுவபுரஸ்கார் விருதி​னை இந்த புத்த்கத்திற்காக திரு லக்ஷ்மி சரவணகுமார் அவர்களுக்கு கி​​டைத்துள்ளது
ரூ.200 விலையுள்ள இந்த நூல்  தி.நகர் நியூ புக்லண்ட்ஸ்  [பேஸ்மெண்ட்]கடையில் கிடைக்கும் 
முகவரி:No-52-C,Basement, North Usman Road, Near Panagal Park Flyover North End, Thiyagaraya Nagar, Chennai, Tamil Nadu 600017
.