காம்யுவின் ’முதல் மனிதன்’ – இலக்கில்லாத தேடல்
முப்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் காம்யுவின் ‘முதல் மனிதன்’ என்ற நாவலை முப்பது ஆண்டுகள் மொழிபெயர்ப்பு பணி செய்யும் வே. ஸ்ரீராம் பிரெஞ்சு மூலத்திலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். புகழ்பெற்ற பல பிரெஞ்சு நூல்களை தமிழ் மொழிபெயர்ப்பாக தொடர்ந்து கொடுத்துவரும் க்ரியா பதிப்பகம் இதனையும் வழக்கமான நேர்த்தியோடு வெளியிட்டுள்ளது.
![]() |
க்ரியா பதிப்பகம் ராமகிருஷ்ணன் |
காம்யுவின் ‘முதல் மனிதன்’ ஆதிமனிதனல்ல. முதல் மனிதனுக்கு தந்தை இல்லை. அவனுக்கென்று மரபு எதுவும் இல்லை. அறிவாக தன்னை காட்டிக்கொண்ட ஏதோ ஒன்றின் துணையோடு நல்லது, கெட்டது, நியாய அநியாயம் போல் தோன்றியவற்றை தானே வகுத்துக்கொண்டான். தனக்கென்று தானே ஒரு மரபை உருவாக்கிக்கொண்டான். எங்கிருந்தோ அங்கே தூக்கி எறியப்பட்டதாக உணர்ந்த அந்த “பிரமாண்ட” நாட்டில் அவன்தான் முதல் மனிதன்.
![]() |
காம்யு |
அவன் புலம்பெயர்ந்தவர்களோடு இருந்தான். “கடந்தகால வரலாறோ, ஒழுக்க நெறிமுறைகளோ, வழிகாட்டிகளோ, மத ஈடுபாடோ இல்லாமல், இருத்தலிலேயே மகிழ்ச்சியடைந்து இருளுக்கும் சாவுக்கும் பயந்தபடியே ...” இருந்த மனிதர்கள். இவர்கள் வாழ்க்கையை, சுதந்திரமான தேர்வு இருந்திருக்காத வாழ்க்கையை, வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டவர்கள்.
இலையுதிர்கால இரவு மழையில் ழாக் கோர்மெரியின் பிறப்போடு நாவல் துவங்குகிறது. இடையில் நாற்பது ஆண்டுகளை விடுத்து மீண்டும் வசந்தகாலத்தின் மதிய வேளையில் தனது விவரிப்பை தொடங்குகிறது. கால இடைவெளியை மீண்டும் மீண்டும் தாண்டிச் சென்று ழாக் கோர்மெரிக்குள் “ பீறிடும் வளமான குழந்தைப்பருவ நினைவுகளை” பிடித்துவந்து காட்டும் நாவலின் கட்டமைப்பு நிகழ்காலத்திற்கும் கடந்த காலத்திற்குமான ஒரு ஊசலின் இயக்கம்.
ஏழ்மையும், இல்லாமையும் தரும் அவலத்தின் அத்தனை பரிமாணங்களையும் மிகையில்லாமல் காணலாம். அநாமதேயம், அடையாளமின்மை, மரபின்மை, வெறுமை—இவற்றின் மௌனத்தோடு சமர் புரியும் தீராத வாழ்க்கைப்பசி, அறிவின் கட்டுக்கடங்காத ஆர்வம், இந்த மோதலின் தீவிரம், அதில் பிறக்கும் தவிப்பு – இவற்றையும் மிகையின் விரசம் இல்லாமல் காணலாம். உணர்ச்சியின் வேகம் உண்மையான கலைப்படைப்பு விதிக்கும் வரம்புக்குள் நிற்பதும், அதை அப்படியே நிற்கவைக்கும் ஜாலமும்தானே இலக்கியம்!
ழாக் கோர்மெரியின் குடும்பம் அல்சாஸ் பிரதேசத்திலிருந்து ஜெர்மானியர்களால் துரத்தப்பட்டு அல்ஜீரியாவில் குடியேறியது. அவனது தாயின் குடும்பம் ஸ்பெயினின் மகோன் தீவிலிருந்து அங்கே வந்தது. ழாக்கின் தந்தை தாய்நாட்டுக்காக போரில் உயிர்விட்டார். அவருக்கு அப்போது வயது இருபத்தொன்பது. அவரது கல்லறையைத் தேடி சென்ற ழாக் நாற்பது வயதை தாண்டியிருந்தான். தந்தையைவிட மகனுக்கு வயது அதிகம்! இது அவனை உலுக்கிவிட்டது. கால நதியின் ஓட்டத்தில் வருடங்கள் தத்தம் இடத்திலிருந்து நழுவி இயற்கையின் ஒழுங்குமுறை குலைந்துபோனதல்லவா?. நரைதட்டும் மனிதர்களின் “தந்தைகளாக இருந்த குழந்தைகள் தூவப்பட்ட இடம்” அந்த கல்லறைத் தோட்டம்.
போரும், புலப்பெயர்வும், ஏழ்மைக்கும் இல்லாமையின் கொடுமைக்கும் பிறப்பிடம். அவன் தாய் செவிடு. பேச்சுத்திறன் இல்லை. மகிழ்ச்சியோ சுரத்தோ எப்போதுமே இருந்தது இல்லை. பாட்டி ஒன்பது குழந்தைகளை பெற்று வளர்த்தவள். இல்லாமையின் கொடுமையில் இரண்டு ஃப்ராங்குகளே அவளுக்கு கனிசமான தொகை. அவனைவிட பெரியவர்களுக்கு பொருந்தும் உடைகளைத்தான் பாட்டி அவனுக்கு வாங்கியிருப்பாள். தேவையின் கொடுமையில் உறவினர்கள் ஒருவரை ஒருவர் புண்படுத்திக் கொள்வார்கள். மாமா எர்னெஸ்ட் அவர் அண்ணனுடன் கோபாவேசத்தில் சண்டையிட்டாரல்லவா? கோடைகால விடுமுறையில் அவன் வேலைக்கு போகவேண்டியிருந்ததே! வேலையில் சேர்வதற்கு ஒரு பொய். பள்ளிப்படிப்பை தொடர்வதற்கு வேலையிலிருந்து விலக ஒரு பொய். தோழர்கள் யாரும் வீட்டுக்கு வருவதில்லை என்ற போலி அவமான உணர்வு – இப்படியாக ஏழ்மையின் சாபக்கேட்டை ழாக் அனுபவிக்கிறான். முதல் சம்பளம் பெற்று வரும்போது வெகுளித்தனமும், குழந்தைத்தனமும் செத்துப்போய் அவனுக்குள் இருந்த சிறுவனும் இறந்துவிடுகிறான். “பெயரற்ற, வரலாறு அற்ற பிறவிகளை உருவாக்கிய ஏழ்மை என்ற புதிர்தான் அங்கு இருந்தது”. அங்கு எல்லாரும் ஆன்மா இல்லாத வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
பள்ளித்தோழன் திதியேவுக்கு தாய்நாடு, தலைமுறைகள்வழி வந்த குடும்பம், எதிர்கால கனவுகள், நன்மை தீமையின் புரிதல், எல்லாமே இருந்தன. ழாக்கிற்கு கடந்த காலம் இல்லாத, எதிர்கால கற்பனை இல்லாத, நிகழ்காலத்திலேயே கழியும் வாழ்க்கை.
பெயரற்ற நிலையிலிருந்தும், வரலாறு இல்லாத கூட்டத்திலிருந்தும் அவன் தப்பிக்க விரும்பினான். ஆனால் அவனுக்குள் இனம்புரியாத ஒன்று இருளையும் அநாமதேயத்தையும் தீவிரமாக விழைந்தது. எதிரெதிரான விழைவுகள் அவனுக்கே அவனை ஒரு புதிராக்குகிறது.
புதிர் எப்படி விடுபடுகிறது? நீண்டநாள் வாழவேண்டும் என்ற வெறித்தனமான வேட்கை. அது பெண்ணின் ஸ்பரிசத்தில் வரும் மூர்ச்சையைபோல தன்னை உணரச்செய்யும். “முழுமையாக சாவை எதிர்கொள்ளும் கலப்படமற்ற வேட்கை”. அன்றாட வாழ்க்கையில் காரண-காரிய நியாயங்களைக் கொடுத்த, கன்ணுக்கு புலனாகாத ஒரு சக்தி “ கிளர்ச்சி செய்யாமல் சாவதற்குமான நியாயத்தையும் அளிக்கும்”. இப்படி அவனுக்கு ஒரு “குருட்டு நம்பிக்கை”.
‘முதல் மனிதன்’ தனக்காக தானே மேற்கொண்ட இலக்கில்லாத தேடலும் அதனை தொடர்ந்து வரும் தீவிர மனப் போராட்டமும்தான் நாவலின் ஊடுசரம். தேடலின் இலக்கில்லாமையும், அதனை அவனே மேற்கொள்ளவேண்டிய சூழலும்தான் அவனை முதல் மனிதனாக்குகிறது.
காம்யுவின் நாவலை சுயசரிதை நாவல், சுயசரிதை விவரணை என்று சொல்வதுண்டு. இருத்தலியல் தத்துவத்திற்கு இது ஒரு கதைவடிவம் என்றும் சொல்லலாம். காம்யுவின் சொந்த வாழ்க்கை இந்த நாவலில் எவ்வளவு கலந்து இருக்கிறது என்று காண்பதேகூட விமர்சன நோக்கமாக இருந்திருக்கிறது. சுயசரிதமும், ஏதாவது ஒரு தத்துவமும் சம்பவங்களை கோர்க்கும் இழையாக இருப்பது நாவலின் மதிப்பை உயர்த்துவதாக கருதுவது இலக்கியத்தின் தன்மையை அறியாத பத்தாம்பசலித்தனம். ழாக் ( அவன் காம்யு வாகவே இருந்தாலும் கூட), அவனது தாய், பாட்டி, மாமா, அவனது ஆசிரியர் – இவர்களை கதாபாத்திரங்களாகவே ஏற்கவும், பார்க்கவும் வேண்டும். நாவலை ஒரு புனைவு இலக்கியமாகவே பார்க்கவேண்டும். நாவலில் சம்பவங்களுக்கு பஞசமிருப்பதாக கருத இடமில்லை. சம்பவங்கள் எல்லாம் பாத்திரங்களின் புறநிகழ்வு நடவடிக்கைகளாகவே இருக்கவேண்டும் என்பது இல்லை. அவற்றைவிட சுவாரஸ்யமான, கணக்கிலடங்காத சம்பவங்கள் ழாக்கின் மனவெளியிலேயே நிகழ்கின்றன.
காம்யுவின் மகள் காதரின் காம்யு நூலின் பிரஞ்சு மூலத்திற்கும், ஆங்கில மொழிபெயர்ப்புக்கும் எழுதிய முன்னுரைகளின் மொழிபெயர்ப்பு, பிரஞ்சு மூலத்தின் பனுவல் உருவான விதம், பனுவலில் தெளிவில்லாத, கையெழுத்து புரியாத சொற்கள், காம்யு கொடுத்திருந்த மாற்றுப் பனுவல், இடைச்செருகல், அவரது குறிப்புகள், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் – அறிவுலகத்தேடலுக்கு எல்லாவகையிலும் ஈடுகொடுக்கும் பதிப்பு. வே. ஸ்ரீராமின் இந்த தமிழ் மொழிபெயர்ப்பு, மொழிகளின் தன்மையால், பண்பாடு, கால வேறுபாட்டால் வரும் இடைவெளியை திறமையாக தாண்டி வந்துள்ளது. பொருள் எவ்வாறு முழுமையாக தமிழுக்கு வந்துள்ளதோ அவ்வாறே வாக்கியத்தின் வடிவமைப்பும் தமிழின் தன்மைக்கு இசைந்தவகையில் சிதையாமல் வந்துள்ளது. நாவலில் விவரிப்பு உணர்ச்சியின் தீவிரத்தை எட்டும்போது அதற்கு ஈடுகொடுத்து மொழிபெயர்ப்பின் மொழியும் தீவிரமாகிறது. இதைச்சாதித்த சொற்களின் செறிவும், கோர்வையும் பாராட்டத்தக்கது.
நன்றி-தங்க. ஜெயராமன்
No comments:
Post a Comment